Friday, March 7, 2014

என்றும் போல நாளை ... மற்றொரு நாள்...


“கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்தியா ப்ரவர்ததே!!
உத்திஷ்ட்ட நரசாடூலே கர்த்தவ்யம் தெய்வமாக்னியம்!!”

ஆஹா....என் அலைபேசியின் ஒலிக்கடிகை ஒலிக்கும் முன் தந்தையின் சுப்ரபாதம் தொடங்கியாயிற்று.இனி தாயாரின் அர்ச்சனையிலிருந்து தப்பிக்க,சத்தமில்லாமல் படுக்கையை விட்டு அகன்று பல் துவக்க ஆயத்தமானேன்.ம்ம்....வெள்ளிக்கிழமை....இன்று ஒரு நாள் மட்டும் கல்லூரிக்கு சென்றுவிட்டால்,பின்வரும் இரண்டு நாட்களில் நன்றாக கும்பகர்ண சேவை செய்யலாம் அல்லவா!!.இந்ந நப்பாசை தோன்றவே வேகவேகமாக அந்நாளின் கடைமைகளுக்கு என்னை ஆயத்தமாக்கிக் கொண்டேன்.ஒரு வழியாக ,கண்ணாடிக்கு முன் ஒப்பனை அலங்காரத்தை முடித்துவிட்டு,இரண்டு தோசைகளை உள்ளடக்கி,தாத்தாவின் அஞ்சரைப் பெட்டியிலிருந்து சில சில்லரைகளை லவட்டிவிட்டு,கல்லூரிக்குப் புறப்பட்டேன்.

காலை நேர பரபரப்பில்,தனியார் பேருந்தின் நெரிசலில்,வானொலியில் புதுப்பாடல்கள் கேட்பது ஒரு தனி சுகம்.அதுவும் அமர ஒரு இருக்கை கிடைத்தால்,கேட்கவும் வேண்டுமா?? அன்று அதுபோல சன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து,வானொலியின் சொல்லுக்கு செவி சாய்த்தேன்.வானொலி தொகுப்பாளர் வருகின்ற தேர்தலைப் பற்றி காரசாரமாக பறைசாற்றினார்.பின்பு,நாளைய நாளின் முக்கியத்துவம் என்ன என்று ஒரு வினாவை கேட்டுவிட்டு ,
“மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவை இன்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ?? “
என்ற பாடலை ஒலிக்கவிட்டார்.
நாலை காதலர் தினம் அன்றே !! பின் எதற்கு இந்த பாடல் என்று சிந்திக்கும் பொழுதே,அத்தொகுப்பாளர் , ‘என் இனிய தோழியர் அனைவருக்கும் நாளை உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்’ என்று கூறி ,மேலும் இரு பாடல்களை ஒலிக்கவிட்டார்.

ஏன்? மகளிர் தினத்தை முன்னிட்டுத் தான் இப்பாடல்கள் ஒலிக்கப்படவேண்டுமா?? இச்சிந்தையில் கல்லூரிக்குள் செல்லுகையில்,அறிவிப்பு அட்டைவணை என் கவனத்தை ஈர்த்தது.நாளை உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ,கல்லூரியில் மதியம் 12 மணி வரை சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.எனது கும்பகர்ண சேவைக்கு பங்கம் வந்துவிட்டதே என்று முகம் சுளித்தாளும்,என் உள்ளத்தில் மற்றொரு குமுறல் துளிர்விட்டது.......எதற்காக மகளிருக்கு என்று ஒரு தனி தினம்?? அதுவும் உலகளவில்??சமூகத்தின் ஓர் அங்கமாய்,ஆணிவேராய் நிற்கும் பெண்களுக்கு எதற்காக இந்தத் தனி கவனிப்பு??உலக ஆண்கள் தினத்தை வெறும் ஏழு வருடமாக கொண்டாடும் நாம்,ஏன் உலக பெண்கள் தினத்தை மட்டும் ஏன் 25 வருடமாகக் கொண்டாடுகிறோம்??


அந்நாளிருந்து இந்நாள் வரை,ஒரு பெண்ணின் செயல்பாடுகள் தொடர்ச்சியாக சமூகத்தால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.அவளின் செயல்திறன் ஒரு ஆண்மகனின் திறனுக்குக் கீழ் இருந்தாள்,”பரவாயில்லை....அவள் ஒரு பெண்தானே!! இதற்கு மேல் அவளால் என்ன செய்ய முடியும்?? “ என்று ஏளனமாகச் சிரிக்கின்றனர்.அவள் நியாயமாக சேய்ய வேண்டிய செயலைச் செய்தால்,இச்சமுதாயம் அவளை வீணாக வியந்து பார்க்கிறது.சமூகத்தின் ஒரு தூணாய் நிற்கும் ஒரு பாலினத்திற்கு இந்தத் தனி கவனிப்பும் சலுகைகளும் தேவையா??சலுகைகள் கொடுத்து முன்னேற்றப்படுவதற்கு அவள் எந்த வகையில் பின் தங்கிவிட்டாள், என் தோழர்களே??பேருந்துகளில் எதற்காக “பெண்கள் “ என்று ஒரு தனி அறிவிப்பு பலகை வேண்டும்?இரயிலில் கூட பெண்களுக்கு ஏதற்காக தனி ஒதுக்கீடு வேண்டும்?? பாராளுமன்றத்தில் வெறும் 33% தான் பெண்களுக்கு என்று வரையறுக்க தாங்கள் யார்?பெண்னை விட ஆணை ஏன் நம் சமுதாயம் உயர்த்தியே வைக்கிறது?பாலியல் தொழில் செய்யும் பெண்களை ஒதுக்கி வைக்கும் இச்சமூகம்,அந்நிலைக்கு காரண கர்த்தாவாக இருக்கும் ஆணை ஏன் கேள்வி கேட்க மறுக்கிறது??ஏன்...கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும்தானா??ஆண் மக்களுக்கு கற்பு நெறியை எடுத்துரைக்க ஏன் இச்சமூதாயம் மறுக்கிறது??


  சரி!! ‘நாங்கள் பெண்களை தாழ்மையாக கருதவில்லை...மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா!! என்ற வரையறையில் நாங்கள் உங்களை கருதுகிறோம் ‘ என்று ஆண் மக்கள் கூறினாள் ,அதுவும் இத்தேதியில் ஏளனமாகத்தான் தோன்றுகிறது.பெண்களின் குணங்களை பறைசாற்றும் விதமாக நம் நாட்டு நதிகளுக்கெல்லாம் கங்கை,யமுனை,காவேரி என்று பெயரிட்டனர்.ஆனால் அக்காலம் மலையேறிவிட்டது.பண்பாடும் பொறுமையும்,வேகமும் விவேகமும் இக்காலத்தில் எத்துணை பெண்களிடம் இருக்கிறது??அவ்வுளவு ஏன்...பெண்களை பெண்கள் மதிக்கின்றனரா?? இல்லையே!! சமூகத்தை இயக்க வேண்டிய ஒரு பெண்,இன்று இழிவுப்பட்டல்லவா இருக்கிறாள்!!

வழக்கம் போல இவ்வெண்ண்ங்களை என்னுள்ளே புதைத்தவாறு மாலை வீடு வந்து சேர்ந்தேன்.தொலைக்காட்சியை உயிர்பித்தால் “இந்த்ப் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா... “ என்ற பாடல் ஒளித்தது.மிகுந்த எரிச்சலுற்று.........................................வேறு என்ன செய்வேன்??அம்மாவின் கண்களில் படாமல்,”என்” சேவையை செய்யச் சென்றேன்!!!!